மட்டக்களப்பில் கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை!


மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 2 வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்றையதினம் (13-01-2025) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஏறாவூர் 2ஆம் பிரிவு மக்காமடி வீதியைச் சோந்த 2 வயதான முகமட் ஷரகீர் ஜப்பிரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் உள்ள கிணற்றிற்கு அருகில் கதிரை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவதினமான இன்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கிணற்றுக்கு அருகில் வைத்திருந்த கதிரையில் ஏறி கிணற்றை எட்டிப்பாத்த நிலையில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் மாலை 6.00 மணியளவில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடிய நிலையில் கிணற்றுக்குள் குழந்தை வீழ்ந்து கிடப்பதை கண்டு உடனடியாக குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து குழந்தையை பிரேத பரிசோதைனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோரின் கவனயீனத்தால் குழந்தை உயிரிழந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Visited 4 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *