பேருந்து விபத்தில் மூன்று சகோதரிகள் பலி; துயரத்தில் குடும்பம்


தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து வந்தனர்.

இந்நிலையில், இவர்களின் உறவினர்களின் திருமணம் கடந்த மாதம் 15-ம் தேதி தாண்டூரில் நடந்தது. இதற்காக 3 மகள்களும் ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்தனர்.

திருமண நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்ட இவர்கள், நேற்று திங்கட்கிழமை மீண்டும் கல்லூரிகளுக்கு செல்ல தாண்டூர் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு ரயில் சென்றுவிடவே, இவர்களின் தந்தையான எல்லைய்யா மூன்று மகள்களையும் அந்த வழியாக வந்த அரசு பேருந்தில் ஏற்றினார்.

அவர் வீடு போய் சேருவதற்குள், அந்த பேருந்து டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளாகி சகோதரிகள் மூவரும் ஒரே இருக்கையில், ஜல்லி கற்களில் சிக்கிக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்த தகவல் கிடைத்தது.

மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 மகள்களின் சடலங்களைப் பார்த்து பெற்றோர், உற்றார், உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Visited 4 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *