மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு (வயது 92) நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (26) இரவு அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டில்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், டில்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட பலரும் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின் மன்மோகன் சிங்கின் உடல் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது.
