இலங்கையை உலுக்கிய கோர விபத்து; 15 பேர் பலி; சுற்றுலா சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி


எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல பொலிஸ் பிரிவின் 24வது கிலோமீட்டர் தூண் அருகில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தில் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 34 பயணிகள் இருந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (04) இரவு 9 மணியளவில் எல்ல – வெல்லவாய வீதியில் 23வது மற்றும் 24வது கிலோமீட்டர் தூண்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து முன்புறத்தில் இருந்து வந்த ஒரு சொகுசு கார் மீது மோதி, வீதியில் உள்ள பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி சமார் 1000 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது நொறுங்கியுள்ளது.

இருப்பினும், விபத்துக்குப் பிறகு மிக விரைவாக செயல்பட்ட அப்பகுதி மக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது, ​​பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியதலாவ வைத்திசாலைகளில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் உட்பட 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில் 6 ஆண்கள் மற்றும் 9 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் தங்காலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தங்காலை நகரசபைின் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்றும் பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க உறுதிப்படுத்தினார்.

சடலங்கள், தியதலாவ, பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பேருந்து அதன் அதிவேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஒருவர் ஊடகங்களுக்குத் முக்கிய தகவல் ஒன்றை வௌிப்படுத்தியுள்ளார்.

விபத்துக்கு முன்னர் பேருந்தின் சாரதி, பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *