யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து சாரதியின் அனுமதி பத்திரம் பறிப்பு


யாழில் இருந்து வவுனியா சென்ற இ.போ.ச பேருந்து ஒன்றின் சாரதியின் அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து குறைபாடுகளை கொண்ட அரச பேருந்து , பத்து நாட்களுக்குள் பேருந்தை சீரமைக்காவிடில் பேருந்திற்கு நிரந்தர தடை உத்தரவு வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (28) யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தின் மீதே இவ்வாறு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் அரச தனியார் பேருந்துகள் வவுனியா மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது யாழில் இருந்து வவுனியா வந்த பல பேருந்துகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பேருந்துகளின் சாரதிகளுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், சில பேருந்தின் சாரதிகளுக்கு குற்றப்பத்திரங்களும் வழங்கபட்டிருந்தது.

அத்துடன், வவுனியா சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்றில் பல்வேறு குறைபாடுகள் அவதானிக்கப்பட்ட நிலையில் அதன் சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் போக்குவரத்து பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் தற்காலிக பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்தில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் சரி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சரி செய்யாத பட்சத்தில் பேருந்தின் சேவைக்கு நிரந்தர தடை உத்தரவு வழங்கப்படும் என மோட்டர் போக்குவரத்து திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் சேவையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Visited 4 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *