ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் காவல்நிலையத்திற்கு போன் செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்கிக் கிடப்பதாகக் கூறியுள்ளார்.
அதன்படி, போலீஸார் அங்குசென்று விசாரணை நடத்தியதில் அது மாதிரப்பிள்ளி பகுதியைச் சேர்ந்த அன்ஸில் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையில் அவர் தனக்கு அதீனா ஜூஸில் விஷம் கலந்து குடிக்கக் கொடுத்ததாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதீனாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த அன்ஸிலுக்கு ஸப்னா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அன்ஸிலுக்கும், அதீனாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு முன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, அன்ஸில் தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் அதீனா புகாரளித்துள்ளார். அந்த வழக்கு 2 வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வைத்து சமரசமாக முடித்துவைக்கப்பட்டது.
சம்பவத்தன்று அன்ஸிலை தனது வீட்டுக்கு அழைத்து, அதீனா திட்டமிட்டபடி ஜூஸில் பூச்சிக் கொல்லி மருந்தை கலக்கி கொடுத்துள்ளார். அதைக் குடித்ததும் துடிதுடித்த அன்ஸில் மயங்கி விழுந்துள்ளார். பின் அவரது உடலை வீட்டுக்கு அருகே போட்டு விட்டு போலீஸாரிடன் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
மேலும் கோர்ட்டில் சமரசமாக முடித்துவைக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கூறியபடி, தனக்கு தரவேண்டிய பணத்தை அன்ஸில் தராததால் கொலைசெய்ததாக அதீனா கூறியிருக்கிறார். தற்போது அதீனா கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
