வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அம்பாறை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு அங்கு பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
உகந்தமலையில் நாங்கள் முருகன் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இப் புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது? என பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கதிர்காமம் போல் உகந்தை மலையையும் பௌத்த மயமக மாற்ற திட்டமிட்ட சதி நடக்கிறதா? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த விடயம் தொடர்பாக இந்துக்கள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
உகந்தமலையில் வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலையை நிறுவுவதற்கு முன்னாள் கிழக்கு ஆளுநர் அமைச்சர்கள் முதல் ஆலய நிர்வாகத்தினர் முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், அதே சூழலில் உள்ள மற்றொரு மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருப்பது இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை இன மத பேதம் பார்க்கப்படாத இன்றைய ஜனாதிபதி அனுர அரசாங்கம் இதற்கான உரிய நீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
